உள்ளூர் செய்திகள்

கோவையில் இளம்பெண்ணிடம் ரூ. 6 லட்சம்- நகை நூதன மோசடி

Published On 2023-02-23 09:53 GMT   |   Update On 2023-02-23 09:53 GMT
  • ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன்.
  • ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன்.

கோவை,

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் அப்துல் ரசிம். இவரது மனைவி மும்தாஜ் (வயது 30).

இவர் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ஒரு நகை கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். எனக்கு கோவை செட்டி வீதியை சேர்ந்த ஆனந்த் பாபு என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அவர் என்னிடம் ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக வருமானம் வரும் என்றார்.

அதனை நான் உண்மை என நினைத்து என்னிடம் இருந்த ரூ. 6 லட்சம் மற்றும் 8 பவுன் தங்க நகையை அவரிடம் கொடுத்தேன். அதன் பின்னர் அவர் எனக்கு எந்த பணமும் தறவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ஆன்லைனில் இருந்து இன்னும் பணம் வரவில்லை வந்தவுடன் தருவதாக கூறினார்.

சில மாதங்கள் கழித்து மீண்டும் கேட்டபோது பணம் தராமல் முன்னுக்கு பின் முரணாக பதில் தெரிவித்தார். அப்போது தான் அவர் என்னை ஏமாற்றி வருவது தெரியவந்தது. உடனே நான் எனது பணத்தையும், நகையையும் திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் அதையும் அவர் தராமல் ஏமாற்றி வந்தார்.

எனவே ஆனந்த் பாபு மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தையும், நகையையும் அவரிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News