உள்ளூர் செய்திகள்

மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி- கணவர்-மாமியார் உள்பட 3 பேர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு

Published On 2022-07-25 14:39 IST   |   Update On 2022-07-25 14:39:00 IST
  • மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
  • மகேஷ்வரன் அளித்த புகாரின்பேரில் போலீசார், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் மேலப்பாவூர் பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் மகேஷ்வரன்(வயது 29). இவரது தங்கை திருமலை செல்வி(27).

பெயர் சூட்டு விழா

இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள நாகல்குளத்தை சேர்ந்த மாரிதுரை என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆன பிறகு மாரிதுரை பெயர் சூட்டு விழா வைத்துள்ளார். ஆனால் அதற்கு மகேஷ்வரனை அழைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த மகேஷ்வரன் தனது மைத்துனர் வீட்டுக்கு சென்று தன்னை அழைக்காதது குறித்து கேட்டுள்ளார்.

ரூ.5 லட்சம்

அப்போது மாரிதுரை, அவரது தாய் மற்றும் அத்தை ஆகிய 3 பேரும் சேர்ந்த ரூ.5 லட்சம் வரதட்சணையாக தந்தால் மட்டுமே விழாவுக்கு அழைப்போம் என்று கூறி உள்ளனர்.

இதனால் 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் மாரிதுரை தனது மனைவி திருமலை செல்வியை அடித்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

இதனால் மன வேதனை அடைந்த திருமலை செல்வி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுதொடர்பாக மகேஷ்வரன் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மாரிதுரை மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியபிரபு. இவரது மனைவி கலைசெல்வி(வயது 31). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தையும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

கலைச்செல்வி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் சமீபத்தில் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அவரது நகைகளை ஆரோக்கியபிரபு மற்றும் அவரது பெற்றோர் அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

விசாரணை

பிரசவம் முடிந்து கலைச்செல்வி தனது வீட்டுக்கு சென்றபோது நகைகள் குறித்து கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவரது கணவர் முறையாக பதிலளிக்காமல் அவரை அடித்து பெற்றோர் வீட்டுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியபிரபு மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News