காரமடை அருகே தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
- காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது.
- பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள ஆதிமதையனூர், கட்டாஞ்சி மலை பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே யானை நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.இந்த நிலையில் சம்பவத்தன்று புங்கம்பாளையம் பகுதிக்குள் ஒற்றை யானை ஒன்று குட்டியுடன் புகுந்தது. குடியிருப்பு பகுதிக்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றது.
அங்கு ரங்கசாமி என்பவருக்கு சொந்தமான 50 தென்னை மரங்களையும், பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான 250 வாழை மரங்களையும் பிடுங்கி எறிந்து சேதப்படுத்தியது.
மேலும் வாழைகளை தின்றும், காலால் மிதித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து யானை இதுபோன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பகுதியில் வனத்துறையினர் ரோந்து மேற்கொண்டு யானை நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.