உள்ளூர் செய்திகள்
சூலூர் அருகே வாய்க்காலில் காருடன் பாய்ந்த வாலிபர்
- தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
- சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர்,
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தேவனூர் புதூர் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ்(35). இவர் நேற்று சூலூர் அருகே சுல்தான்பேட்டை அடுத்துள்ள பச்சார்பாளையம் வழியாக காரில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. குடிபோதையில் அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பரம்பிக்குளம் ஆழியாறு பிஏபி வாய்க்காலில் கார் பாய்ந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வருவதற்குள் காரில் சிக்கியிருந்த சதீஷ் மீட்கப்பட்டார். வாய்க்காலில் மிதந்தபடி கிடந்த காரை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். இந்த சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.