உள்ளூர் செய்திகள்

கோவையில் மனைவி சேர்ந்து வாழ வர மறுத்ததால் ஆற்றில் குதித்த வாலிபர்

Published On 2023-10-04 14:58 IST   |   Update On 2023-10-04 14:58:00 IST
  • கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
  • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் வீதயை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 25). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஷபானா.

இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ஷபானா அவரது கணவரை பிரிந்து தாராபுரத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

சாதிக்அலி பெரியர்வர்களிடம் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கூறினார்.

அதன்படி பெரியவர்கள் ஷபானாவிடம் பேசி பார்த்தனர். ஆனால் அவர் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்து விட்டார்.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சாதிக்அலி தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி அவர் வீட்டின் பின் பகுதியில் உள்ள ஆற்றுபாலத்துக்கு சென்றார்.

அங்கு இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஆற்றில் குதித்து சாதிக் அலியை மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News