உள்ளூர் செய்திகள்

சுரேஷ்.

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற ஆசிரியர் விபத்தில் பலி

Published On 2022-10-22 09:27 GMT   |   Update On 2022-10-22 09:27 GMT
  • சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார்.
  • இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிஷோர் (13) என்ற மகன் உள்ளார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி இயங்கும் இடத்திற்கு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க சென்று வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீபாவளியை தனது குடும்பத்துடன் கழிக்க சொந்த ஊரான சோழம் பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வாசுதேவனூர் அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியர் சுரேசை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

Tags:    

Similar News