காரமடையில் பழக்கடை குடோனில் தீ விபத்து
- தி டீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது
- தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
மேட்டுப்பாளையம்,
காரமடை-மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் பழக்கடை, மருந்துக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை இயங்கி வருகின்றன.
இங்கு காரமடையை சேர்ந்த நாகராஜ்(45) என்பவர் பழக்கடை நடத்தி வருகிறார். பழக்கடையில் உள்ள பழங்களை டிரேவில் வைத்து கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் வைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை கடையில் வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பழக்கடைக்கு பின்புறம் உள்ள குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த கடை உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வெளியில் ஓடி வந்தனர்.
சிறிது நேரத்தில் தீ குபு, குபுவென பிடித்து எரிய தொடங்கியது. குடோன் முழுவதும் தீ பரவியதால் அந்த பகுதியே புகை மண்ட லமாக காட்சி அளித்தது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காரமடை போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அங்கு பற்றி எரிந்த தீயை அரை மணி நேரம் போராடி அணைத்தனர். தீ விபத்தில் பழக்கடையின் கழிவுகள் வைக்கப்பட்டிருந்த டிரேக்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக கடையின் முன்புறம் இருந்த பழக்கடைக்கு தீ பரவ வில்லை. இதனால் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் காரமடை நகரமன்றத்தலைவர் உஷா வெங்கடேஷ், திமுக நகர செயலாளர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.