கோவையில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி மீது வழக்கு
- கடன் கொடுத்த தம்பதி கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் பொய் வழக்கு கொடுத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
- கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9-வது வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48).
உணவு பார்சல் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் தன்னுடைய ெதாழில் தேவைக்காக தனது மாமனார் பெயரில் உள்ள வீட்டை அடகு வைத்து நிதி நிறுவனம் நடத்தி வரும் செந்தில்குமார், பிரியா தம்பதியிடம் இருந்து ரூ.7 லட்சம் கடன் பெற்றார்.
கொரோனா பரவல் கால கட்டத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கார்த்திகேயனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இந்தநிலையில் கடன் கொடுத்த தம்பதி கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் பொய் வழக்கு கொடுத்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இது குறித்து கார்த்தி கேயன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.