குலசேகரன்பட்டினத்தில் தசரா 8-ம் திருநாள்-அன்னை முத்தாரம்மன் இன்று இரவு கமல வாகனத்தில் பவனி
- முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
- பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்தசரா பெருந்திருவிழாவில் 8-ம் திருநாளான இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் கமலவாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். இன்று முன்னதாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அம்மனுக்குபல்வேறு சிறப்பு அபிசேகங்களும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சமய சொற்பொழிவு, இன்னிசை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
கோவிலில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் ஊழியர்கள் செய்து உள்ளனர்.மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விரதம் இருந்து வந்த பக்தர்கள் தங்களுக்கு பிடித்தமான வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று அம்மன் பெயரில் காணிக்கைவசூல் செய்து வருகின்றனர். ஊர் பெயரை கொண்டு தசரா குழு அமைத்து நையாண்டி மேளம், தாரை தப்பட்டை, கரகம் காவடி, கோலாட்டம் மயிலாட்டம் என பல்வேறு கிராம தய கலைஞர்களுடன் இணைந்து ஊர் ஊராக சென்று கலை நிகழ்ச்சி நடத்தி அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து வருகின்றனர்.