காஞ்சிபுரத்தில் மழையால் 30 முகாம்களில் 849 பேர் தஞ்சம்
- உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது.
- 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.
சென்னை:
பெஞ்ஜல் புயல் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நேற்று கரையை கடந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக் காற்றுடன் மழை விட்டு விட்டு பெய்தது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூர் தாலுகாவில் அதிகமாக மழை பெய்துள்ளது. மற்ற தாலுகாவில் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய மழை இல்லை.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:
பெஞ்ஜல் புயல்-பலத்த மழை சேதத்தை ஏற்படுத்தும் என கருதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. நிவாரண முகாம்கள் 30 இடங்களில் ஏற்படுத்தப்பட்டன.
இதில் நேற்றிரவு 849 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாவட்டத்தில் 65 இடங்களில் தேங்கி நின்ற தண்ணீர் முழுமையாக வடிய வைக்கப்பட்டன. 17 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதையும் அப்புறப்படுத்திவிட்டோம். 5 குடிசை வீடுகள் இடிந்துள்ளது. அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்க அரசு ஏற்பாடு செய்யும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.