உள்ளூர் செய்திகள்

6 வயது சிறுவன் பலி எதிரொலி: கட்டிட பணிகளை முடிக்காமல் பள்ளியை திறக்க எதிர்ப்பு

Published On 2023-10-09 09:54 GMT   |   Update On 2023-10-09 09:54 GMT
  • அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தகவல் அறிந்து வந்த தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வடவள்ளி,

கோவை தொண்டாமுத்தூர் சாலை நாகராஜபுரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப்பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் தற்போது கட்டிட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு தண்ணீர் தொட்டி ஒன்றும் உள்ளது.

கடந்த 6-ந் தேதி இந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்தான். இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. அதன்படி நாகராஜபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியும் திறக்கப்பட்டது. மேலும் அதன் அருகே உள்ள அங்கன்வாடி மையமும் திறக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கு திறந்திருந்த அங்கன்வாடி மையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்தவரிடம் பள்ளியில் வேலை நடந்து வரும் நிலையில், வேலையை முடிக்காமல் எப்படி பள்ளிைய திறக்கலாம் என கேட்டனர்.

மேலும் பள்ளியை உடனே மூட வேண்டும். வேலை முடிந்த பின்னர் திறக்க வேண்டும் என்றனர். ெதாடர்ந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் தொண்டாமுத்தூர் போலீசார், கல்வி துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கட்டிட வேலைகள் முடிக்கும் வரை பள்ளி திறக்கப்படாது என்றும், அதுவரை அருகில் உள்ள வேறு இடத்தில் அங்கன்வாடி செயல்படும் எனவும் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News