கோவையில் திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் மாயம்
- செல்போனில் யாருடனோ அடிக்கடி பேசி வந்ததாக தகவல்
- மனைவியை மீட்டு தரும்படி கணவர் போலீசில் புகார்
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் இளம்பெண் யாருடனோ அடிக்கடி பேசிக்கொண்டு இருந்தார். இது அவரது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அவர் இளம்பெண்ணின் தாயிடம் கூறினார். அவர் இளம்பெண்ணை கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அவரது கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது இளம்பெண் அக்கம் பக்கத்தினரிடம் தான் ஏற்கனவே வேலை செய்த மில்லுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கும் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து இளம் பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் திருமணமான 6 மாதத்தில் மாயமான புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்