திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது
- திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கஞசா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் அறிவுறுத்தலின்படி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாண்டி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அனுமந்தராயன் கோட்டை மேலப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மேலப்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் ஒரு கும்பல் பதுங்கி இருந்தது.அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர்.உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மேலப்பட்டியை சேர்ந்த ரோஸி (வயது 46), பீட்டர் (38), பேகம்பூரை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (21), செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த பழனிவேல் (22), காந்திநகர் காலனியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் சக்திவேல் (20) என்பது தெரியவந்தது.மேலும் அவர்கள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக அவர்களுக்குள் பிரித்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா, மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய மேலப்பட்டியைச் சேர்ந்த ஜான், வினோத் ஆகிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.