உள்ளூர் செய்திகள்

பீளமேட்டில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் தங்கம், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

Published On 2023-02-12 14:38 IST   |   Update On 2023-02-12 14:38:00 IST
  • மாயகண்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியின் தாய் வீட்டுக்கு தொண்டாமுத்தூர் சென்றார்.
  • போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

பீளமேடு,

கோவை விளாங்குறிச்சி ரோடு குமுதம் நகரை சேர்ந்தவர் மாயகண்ணன் (வயது 57). தொழில் அதிபர். இவரது மனைவி செல்வநாயகி (53).

சம்பவத்தன்று மாயகண்ணன் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியின் தாய் வீட்டுக்கு தொண்டாமுத்தூர் சென்றார். அப்போது அவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் செல்வநாயகிக்கு போன் செய்து வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

உடனே செல்வநாயகி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முதல் மாடியில் உள்ள முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது, அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 40 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள், 12 கை கடிகாரம், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்து.

இதுகுறித்து செல்வநாயகி பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது வீட்டுக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

மேலும் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த திருடர்களை தேடி வருகின்றனர்.தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் தங்க நகைகள், 1½ கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News