சரண் அடைந்த 4 பேரையும்காவலில் எடுக்க முடிவு
- கோவையில் ரவுடி சுட்டு கொலை செய்யப்பட்டார்.
- போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்கிறார்கள்.
கோவை,
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சத்திய பாண்டி (வயது 32). இவர் கோவையில் தங்கி இருந்து கூலிப்படையாக செயல்பட்டு வந்தார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த இந்து முன்னணி பிரமுகர் பிஜூ கொலை வழக்கில் சத்திய பாண்டி கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இவருக்கும் மற்றொரு கூலிப்படையை சேர்ந்த சஞ்சய் என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சத்தியபாண்டி கடந்த 12-ந் தேதி ஆவாரம்பாளையம் ேராட்டில் ஒரு கும்பலால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சஞ்சய் தலைமையிலான கும்பல் சத்திய பாண்டி னை கொலை செய்தது தெரிய வந்தது.
கொலை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொலை கும்பலை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சஞ்சய் மற்றும் அவரது கூட்டாளிகள் காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரும் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். நீதிபதி சரணடைந்த 4 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் சஞ்சய், காஜா உசேன், ஆல்வின், சபூல்கான் ஆகிய 4 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
சரணடைந்த 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி கோவை போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதற்காக போலீசில் விரைவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.