கோவையில் மூதாட்டியிடம் 4 பவுன் நகைகள் பறிப்பு
- மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன்
- மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
சுங்கம் பைபாஸ் ரோடு கோபி நகரை சேர்ந்தவர் சுசீலா(வயது70). சம்பவத்தன்று இவர் லங்கா கார்னர் சிக்னல் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் மூதாட்டியிடம் பிரதமர் நிதி திட்டத்தில் உங்களுக்கு ரூ. 2 ஆயிரம் பணம் பெற்று தருகிறேன் என ஆசை வார்த்தை கூறினார்.பின்னர் உங்களை போட்டோ எடுக்க வேண்டும் என கூறினார். மேலும் அருகே உள்ள ஸ்டூடியோவுக்கு செல்லலாம் என கூறி அந்த நபர் மூதாட்டியை தாமஸ் வீதிஅருகே அழைத்து சென்றார்.
பின்னர் போட்டோ எடுக்கும் போது அதிகளவில் நகை அணிந்து இருந்தால் உங்களுக்கு பிரதமர் நிதி திட்டத்தில் பணம் கிடைக்காது என கூறி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயின் மற்றும் 1 பவுன் தங்க கம்மலை கழட்டி அந்த நபர் வாங்கி கொண்டார். அதனை ஒரு பேப்பரில் சுற்றி மூதாட்டியிடம் கொடுத்து விட்டு இங்கேயே இருங்கள் வந்து விடுகிறேன் என கூறி விட்டு சென்று விட்டார்.
நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகத்தின் பேரில், மூதாட்டி அவர் நகையை சுற்றி கொடுத்த பேப்பரை பார்த்த போது அதில் நகைகளுக்கு பதிலாக சிறிய கற்கள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை ஏமாற்றி நூதனமாக நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.