காஞ்சிபுரத்தில் சினிமா காட்சி போல் வாலிபரை தீர்த்து கட்ட அரிவாளுடன் விரட்டிய கும்பல்- 4 பேர் கைது
- காஞ்சிபுரம் பகுதி கோவில் நகரம், பட்டு நகரமாக திகழ்கிறது.
- சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதி கோவில் நகரம், பட்டு நகரமாக திகழ்கிறது. இதனால் எப்போதும் காஞ்சிபுரம் நகரம் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் காஞ்சிபுரம், தாயார்குளம் பகுதியில் வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் கொலை செய்யும் நோக்கத்துடன் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டினர்.
அவர்களிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் தெருக்களில் புகுந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை கொலை வெறி கும்பல் விடாமல் துரத்தி சென்றனர்.
சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த சம்பவத்தை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். அதிர்ஷ்ட வசமாக அந்த வாலிபர் கும்பலிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன், வடிவேல், ஸ்ரீதர் என்ற குள்ளஸ்ரீதர், பிள்ளையார்பாளையம் மடம் தெருவைச் சேர்ந்த குமரேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம், வாலிபரை கொலை செய்யும் நோக்கத்துடன் விரட்டியது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.