கோவையில் 34 பவுன் நகைகள், ரூ.7 ½ லட்சம் கொள்ளை
- வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- ராமநாதபுரம் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி லலிதா (வயது 54). துணி தேய்க்கும் வேலை செய்து வருகிறார். இவர்களது பேத்திக்கு காது குத்து நிகழ்ச்சி வைத்து உள்ளனர்.
சம்பவத்தன்று இதற்காக லலிதா தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் டவுன்ஹாலில் உள்ள ஜவுளி கடைக்கு துணிகள் எடுக்க சென்றார். அப்போது அவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை பட்ட பகலில் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய லலிதா கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ேள சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த 2 மர்மநபர்களின் கை ரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 34 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.