உள்ளூர் செய்திகள்

ஆனைமலை அருகே டீயில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து தாய்-மகளிடம் 24 பவுன் நகை கொள்ளை

Published On 2023-05-27 09:17 GMT   |   Update On 2023-05-27 09:17 GMT
  • 3 பேரும் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.
  • மாயமான முத்தம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

பொள்ளாச்சி,

கோவை ஆனைமலை அருகே தர்மராஜ் காலனியை சேர்ந்தவர் கமலம் (வயது 70). இவரது மகள் செல்வி (47). செல்வி மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் செல்விக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து செல்வி கடந்த சில மாதங்களாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள் (50) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.

கமலம் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் இரவில் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். நேற்று இவர்களது வீட்டிற்கு முத்தமாள் வந்தார்.

அப்போது அவர் நானும், இன்று உங்களுடன் மொட்டை மாடியில் படுத்து கொள்கிறேன் என தெரிவிக்கவே 3 பேரும் மொட்டை மாடிக்கு சென்றனர்.அங்கு நேரம் போவது தெரியாமலும், தூங்காமலும் வெகுநேரமாக பேசி கொண்டே இருந்தனர். இவர்கள் அதிகாலை 2 மணி வரை பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது முத்தம்மாள் நான் டீ போட்டு எடுத்து வருகிறேன் என கூறி விட்டு சென்று மீண்டும் டீயுடன் வந்தார்.

அதனை கமலம் மற்றும் அவரது மகளுக்கு கொடுத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து டீ குடித்து விட்டு தூங்கி விட்டனர்.

இந்த நிலையில் இன்று காலை கமலம் வீட்டிற்கு அருகே வசிக்கும் முத்துராஜா என்பவர் தேங்காய்களை போடுவதற்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை.

இதையடுத்து மொட்டை மாடியில் சென்று பார்த்தார்.அப்போது செல்வியும், கமல மும் வாயில் நுரை தள்ளியபடி கிடந்தனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து, செல்வியின் கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

அவர் உடனடியாக இங்கு வந்து 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கமலம், செல்வி ஆகியோர் கழுத்து மற்றும் வீட்டில் வைத்திருந்த 24 பவுன் நகைகள் மாயமாகி உள்ளதாக செல்வியின் கணவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இவர்களது வீட்டில் இருந்த முத்தம்மாள் திடீரென மாயமாகி விட்டார். இதனால் போலீசாருக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இவர் கொடுத்த டீயை குடித்த பின்பு தான் தாயும், மகளும் மயங்கி உள்ளனர். இதனால் அவர் டீயில் ஏதாவது மயக்க மாத்திரை அல்லது வேறு ஏதாவது கலந்து கொடுத்தாரா? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News