நெல்லை மாவட்டத்தில் நாளை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்- 91 மையங்கள் அமைப்பு
- நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர்.
- தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
91 மையங்கள்
நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை 11 ஆயிரத்து 2 மாணவர்கள், 11 ஆயிரத்து 895 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 897 பேர் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 91 மையங்கள் அமைக்கப் பட்டுள்ளது.
இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும், சேரன்மகாதேவி கல்வி மாவட்டத்தில் 18 மையங்களிலும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பாளை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 சிறை கைதிகளுக்கு ஜெயில் வளாகத்தில் தனி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் கல்வி மாவட்ட அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
மேலும் தேர்வு நாளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாக நடத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 13-ந் தேதி தொடங்கிய பிளஸ் -2 தேர்வு முன்தினம் முடிவடைந்தது. பிளஸ்-1 தேர்வு இன்று முடிவடைந்தது.