உள்ளூர் செய்திகள்
தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறிய காட்சி

திருநின்றவூரில் மின்கசிவால் வீடு தீப்பிடித்து எரிந்தது

Published On 2022-06-04 06:46 GMT   |   Update On 2022-06-04 06:46 GMT
தீ விபத்தால் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருட்கள் எரிந்து நாசமாயின.

ஆவடி:

திருநின்றவூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் எம். ஜி.பாஸ்கர். தி.மு.க. பிரமுகர்.

இவரது வீட்டில் முதல் மாடியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது.இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எம். ஜி.பாஸ்கர், அவரது மகன் பிரபு மற்றும் குடும்பத்தினர் உடனே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

இதுகுறித்து உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீ மளமளவென பரவி வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிவதால் தீயை கட்டுப்படுத்த நீண்ட நேரமாக போராடி வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென எரிந்து வருவதால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தால் வீட்டிலிருந்த பிரிட்ஜ், ஏசி ,வாஷிங் மெஷின் உள்ளிட்ட ரூ. 5 லட்சம் மதிப்புள்ள அனைத்து பொருட்கள் எரிந்து நாசமாயின.

திருநின்றவூர் போலீசார் விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

Tags:    

Similar News