உள்ளூர் செய்திகள்
விஜய பிரபாகரன்

தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளராக விஜயபிரபாகரனை நியமிக்க வேண்டும்- மாவட்ட செயலாளர்கள் கருத்து

Published On 2022-06-03 06:04 GMT   |   Update On 2022-06-03 06:54 GMT
இனிவரும் காலங்களில் கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க தே.மு.தி.க. தலைமை திட்டமிட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசியல் களத்தில் தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் நிலையில் அந்த கட்சியை மீண்டும் தூக்கி நிறுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தொடர்ந்து ஓய்விலேயே இருந்து வருகிறார். இதனால் அவரது மனைவியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கட்சியை வழி நடத்தி வருகிறார். கட்சி தொடர்பான முடிவுகளை நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து பிரேமலதாவே எடுத்து வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. வெளியேறியதை அந்த கட்சியினர் விரும்பவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்தால் நிச்சயம் சில எம்.எல்.ஏ.க்களாவது சட்டமன்றத்துக்குள் சென்றிருப்பார்கள் என்றே தே.மு.தி.க.வினர் இப்போதும் கூறி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து இனிவரும் காலங்களில் கூட்டணி மற்றும் அரசியல் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது பலமுறை ஆலோசிக்க அக்கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் தே.மு.தி.க. நிர்வாகிகள் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும், அவர்களது இல்ல விழாக்களிலும் பங்கேற்று வருகிறார். கட்சியில் எந்த பொறுப்பும் இல்லாத நிலையில் விஜயகாந்தின் மகன் என்கிற ஒற்றை அடையாளத்துடன் மட்டுமே அவர் கட்சி பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் விஜய பிரபாகரனை தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை அக்கட்சிக்குள் எழுந்துள்ளது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த கருத்தை பலரும் வலியுறுத்தி உள்ளனர்.

வருகிற பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தே.மு.தி.க. இப்போதே ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் நேரத்தில் பாரதிய ஜனதாவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் வகையிலும், அந்த கட்சி காய் நகர்த்தி வருகிறது.

அதற்குள் கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று பிரேமலதா கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இளைஞர்களை அதிக அளவில் தே.மு.தி.க.வில் சேர்க்க வேண்டும் என்று கட்சி தலைமை நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளார்.

இந்த பணியை மேற்கொள்ள விஜய பிரபாகரனே தே.மு.தி.க.வில் தகுதியான நபர் என்றும், எனவே அவரை கட்சியின் இளைஞர் அணியில் முன் நிறுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைவில் நடைபெற உள்ள தே.மு.தி.க. பொதுக்குழுவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
Tags:    

Similar News