உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சிறுவர், சிறுமிகளின் நடவடிக்கைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்

Published On 2022-05-30 09:49 GMT   |   Update On 2022-05-30 09:49 GMT
குற்ற உணர்வுடன் அவர்கள் திகழ்வதால் இதனை வெளியில் சொல்வதில்லை.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோர், குழந்தைகளிடம் இதுதொடர்பாக காவல்துறையினர் மற்றும் பிற அரசுத்துறையினர் விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.

இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

பாலியல் குற்றங்களை செயல்படுத்துபவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். குழந்தைகளை எளிதில் அணுகி பழகும் இவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பர்.

விளையாடுதல், பரிசு வழங்குதல், விருப்பமானதை வாங்கித்தருதல், விருப்பமான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என தாங்கள் அன்புடன் திகழ்பவர்களாக சிறுவர், சிறுமியரிடம் காட்டிக்கொள்வர்.

சிறுவர், சிறுமியருடன் நீண்ட நேரம் பழகுவதால், அவர்களது விருப்பங்கள் என்ன, அவர்கள் எதில் பலவீனமானவர்களாக இருக்கின்றனர் என்பதை முழுமையாக தெரிந்து வைத்து கொள்கின்றனர். சிறுவர், சிறுமியரிடம் நம்பகத் தன்மையை உருவாக்கி மெல்ல மெல்ல அவர்களை ஆட்படுத்துகின்றனர்.

அவர்கள் சொல்வதை செய்யும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பின் தான் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அத்துமீறல்களை சிறுவர், சிறுமியர் வெளியில் சொல்ல முடியாத அளவு அவர்களது மனநிலையில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது.

குற்ற உணர்வுடன் அவர்கள் திகழ்வதால் இதனை வெளியில் சொல்வதில்லை. இதுவே குரூரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய தொழில்நுட்பமும், இவர்கள் இலக்குகளை எளிதாக அடைய வழிவகுக்கிறது.

ஏனெனில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள், குரூரர்கள். சிறுவர், சிறுமியரின் நடவடிக்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்றோர் கண்காணித்தால், இதுபோன்ற குரூரர்கள் அவர்களது வாழ்க்கையில் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News