மதுரையில் தொழிலாளி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை
மதுரை:
மதுரை உத்தங்குடி மெயின் ரோடு அருகே தட்டான்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பதாக கே.புதூர் போலீசுக்கு இன்று தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு வாலிபர் ஒருவர் அரிவாள் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாநகர் உதவி கமிஷனர் சூரக்குமரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடி விட்டு நின்று விட்டது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் கைரேகை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கே.புதூர் போலீசார் கொலை செய்யப்பட்ட வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வாலிபரை கொலை செய்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் ஒத்தக்கடை மாயாண்டி புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தவசி (20) என்பதும் அவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் நேற்று இரவு அந்த பகுதியில் நண்பர்களுடன் ஒன்றாக சுற்றித் திரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.
நேற்று இரவு தவசி நண்பர்களுடன் அந்த பகுதியில் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.