உள்ளூர் செய்திகள்
முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
முத்துமலை முருகன் கோவிலில் மண்டல பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் புத்திர கவுண்டன்பாளையம் மெயின்ரோட்டில் அமைந்துள்ள உலகிலே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையுடன் முத்துமலை முருகன் கோவில் கட்டப்பட்டு கடந்த 48 நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக தினந்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. கும்பாபிஷேகத்தின் இறுதிநாளான 48 நாள் மண்டல பூஜை நிறைவு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி காலை சிறப்பு யாகம் செய்யப்பட்டு விநாயகர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், மலர்களால் அலங்காரம் நடைபெற்றது.
பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலையில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வசதிக்காக ஆறுபடை வீட்டில் உள்ள முருகப் பெருமானின் உருவங்கள் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது.