உள்ளூர் செய்திகள்
வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்
வேளாண் வளர்ச்சித் திட்ட தொடக்க விழாவில் அமைச்சர் மற்றும் கலெக்டர் விவசாயிகளுக்கு இடுபொருட்களை வழங்கினர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள டி.மேட்டுப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட தொடக்க விழா நடந்தது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். வேளாண் உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை மூலம் தெத்தூர், மேட்டுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் அனிஷ் சேகர் ஆகியோர் வேளாண் இடுபொருட்களை வழங்கினர்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் கூடம்மாள் பழனிசாமி முன்னிலை வகித்தனர்.
வேளாண்மை இணை இயக்குநர் விவேகானந்தன் வரவேற்றார். துணை இயக்குனர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராணி, தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி, ஒன்றிய சேர்மன் பஞ்சு, தெத்துர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், மாணவரணி அமைப்பாளர் பிரதாப், துணை சேர்மன் சங்கீதா மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் காய்கறிகள் கண்காட்சி நடந்தது. இதனை தொடர்ந்து பாலமேட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
மேலும் சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்த படி ஜல்லிக்கட்டுக்கான பிரமாண்ட அரங்கம் அமைப்பதற்கான அலங்காநல்லூர் அருகே வகுத்துமலை அடிவாரத்தில் உள்ள இடத்தை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.