உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜூன் 20-ந்தேதிக்குள் இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம் - நகைகளை இழந்த வாடிக்கையாளர்கள் அறிவிப்பு

Published On 2022-05-23 06:14 GMT   |   Update On 2022-05-23 06:14 GMT
நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

திருப்பூர்:

பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் சேகர் என்பவர் வாடிக்கையாளரின் நகைகளில் சில வளையங்களை துண்டித்து மோசடியில் ஈடுபட்டார்.

புகார் அடிப்படையில் சேகர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இழந்த நகைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்தனர். தாசில்தார் நந்தகோபால் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.

வங்கி அதிகாரிகள் கூறுகையில், தினசரி 30 - 40 வாடிக்கையாளருடன் பேச்சு நடத்தி இழப்பீடு குறித்து தீர்மானிக்கப்பட்டு உயர் அதிகாரிகளிடம் ஒப்புதல் பெற 25 நாட்கள் ஆகும். அதன்பின் இழப்பீடு அறிவிக்கப்படும் என்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:-

நகை மோசடியில் நகைகளை அடமானம் வைத்துள்ள சிலரும் உடந்தை என குற்றம்சாட்டி உள்ளீர்கள். வாடிக்கையாளரை ஏமாற்றியே இந்த மோசடி நடந்துள்ளது. எனவே மோசடியில் வாடிக்கையாளர் உடந்தையாக உள்ளார்கள் என்பதை ஏற்க இயலாது. நகைகளை இழந்துள்ள 557 பேர் உட்படஏற்கனவே நகைகளை திருப்பி எடுத்து சென்ற 84 பேருக்கும் சேர்த்தே இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களின் நகைகள் வங்கி கஸ்டடியில் உள்ளதால் அவற்றுக்கு வட்டி செலுத்த மாட்டோம்.ஜூன் 20-ந்தேதி கட்டாயம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையெனில் அன்று காலை அனைவரும் வங்கி முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News