உள்ளூர் செய்திகள்
தியாகதுருகத்தில் உரக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு- கூடுதல் விலைக்கு யூரியா விற்றால் நடவடிக்கை
யூரியா மூட்டை ரூ.266 மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு உரங்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு சில உரக்கடைகளில் விவசாயிகள் உரம் வாங்க சென்றபோது யூரியா முட்டை ரூ. 266 க்கு விற்பனை செய்ய வேண்டியதை ரூ.400 என வியாபாரிகள் கூறியதாக தெரிகிறது.
எனவே அதிர்ச்சியடைந்த விவசாயிகள் யூரியா கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக வேளாண்மை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று வேளாண்மை உதவி இயக்குனர் தங்கராஜ், வேளாண்மை அலுவலர் வனிதா ஆகியோர் அடங்கிய குழுவினர் தியாகதுருகம் பகுதியில் உள்ள 5 உரக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது உரக்கடைகளில் உரங்கள் இருப்பு எவ்வளவு உள்ளது. டி.ஏ.பி. பொட்டாஷ், யூரியா உள்ளிட்ட அனைத்து உரங்களும் சரியான விலைக்கு விற்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து யூரியா மூட்டை ரூ.266 மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
மேலும் உரக்கடையின் முன்பகுதியில் உரங்களின் விலைப்பட்டியல் எழுதி வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.