உள்ளூர் செய்திகள்
வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்வு
தொடர் மழை எதிரொலி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
அந்தியூர்:
தொடர் மழை எதிரொலி வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 31.80 அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் பல்வேறு இடங்களில் மிதமான மழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், ஏரி, குளங்கள், ஓடைகள், தடுப்பு அணைகள் நிரம்பி வழிகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு பிறகு பல்வேறு இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
இதனால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குண்டு குழியுமாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதேபோல் கொடுமுடி பகுதியில் சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது. இங்கு அதிகபட்சமாக 32 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
கொம்பனைப்புதூர் காளிங்கராயன் சைபன் பாலத்தில் குரங்கன் ஓடை பகுதியில் நேற்று மாலை சுமார் அரை மணி நேரம் தொடர்ந்து விட்டு விட்டு மழை பொழிந்தது. இதனால் ஆங்காங்கே பெய்த மழை நீரானது குரங்கன் ஒடைக்கு வந்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கின்றது. இந்த தண்ணீர் ஊஞ்சலூர் அருகே வெங்கம்பூரில் காவிரி ஆற்றில் கலக்கின்றது.
இதேபோல் அம்மா பேட்டை, மொடக்குறிச்சி, கொடிவேரி, பவானி, கவுந்தபாடி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
அந்தியூர் அடுத்த பர்கூர் மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது வரட்டுப்பள்ளம் அணை. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் கோடைக்காலங்களில் வனவிலங்குகளுக்கும், பாசனத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் முழு கொள்ளளவு 33.5 அடியாகும். கடந்த வாரம் முதல் வரட்டுப்பள்ளம் அணை சுற்றுவட்டாரப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அணையில் 30.40 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 31.80 அடியாக உள்ளது.மேலும் நேற்று இரவு பர்கூர் மழை சுற்றுவட்டாரப் பகுதிகளில்இரவு முழுவதும் பலத்த மழை பொழிந்தது. இதேபோல் மழை பொழிந்தால் வரட்டுப்பள்ளம் அணை விரைவில் நிரம்பும்.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு-19, கொடுமுடி-32, அம்மாபேட்டை-24.8, மொடக்குறிச்சி-21, கொடிவேரி - 15, பெருந்துறை-3, தாளவாடி-5.4, சத்தியமங்கலம்-19, பவானிசாகர்-5.8, பவானி-11, சென்னிமலை-2, கவுந்தப்பாடி-2.2, குண்டேரிபள்ளம்-1.4.