உள்ளூர் செய்திகள்
21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 21 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதன் முதலாக கடந்த 2020-ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வந்திருந்த 2 பேருக்கு கொரோனா பரவியது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் வேகமாக பரவியது. பின்னர் மாவட்டத்தில் 2-ம் அலை ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதற்கிடையே தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதனால் 2-ம் அலை கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று காரணமாக மாவட்டத்தில் 3-ம் அலை ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஆனால் உயிரிழப்பு அதிக அளவில் இல்லை.
பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்ததன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்தது.
இந்நிலையில் கடைசியாக கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவரும் கடந்த 4-ந் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். இதனால் கொரோனா இல்லாத மாவட்டமாக ஈரோடு இருந்து வந்தது.
இந்நிலையில் கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு பிறகு நேற்று மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதி த்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து32 ஆயிரத்து 673 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 938 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்.