உள்ளூர் செய்திகள்
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பி பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பி பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணை நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 81.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,844 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 300 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 455 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.