உள்ளூர் செய்திகள்
தற்கொலை

இது போலியான உலகம்- தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி உருக்கமான கடிதம்

Published On 2022-05-17 11:26 IST   |   Update On 2022-05-17 11:26:00 IST
கடலூரில் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் கலைக்கல்லூரி உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வகுப்புகள் நடைபெறுகிறது.

இந்த கல்லூரியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்துவருகின்றனர். இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். கழிவறைக்கு சென்றபோது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.

இதனை பார்த்ததும் மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் கல்லூரி வளாகத்தில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் பேராசிரியர்களும் திரண்டனர். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (வயது 19), பி.காம். முதலாமாண்டு படித்து வந்தது தெரியவந்தது. இவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள் ஆவார். இவர் விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார்.

இவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தம்பி சத்தி நல்லா படிடா, அப்பா அம்மாவ பாத்துக்கோ யாரையும் நம்பாதிங்க, இது போலியான உலகம், நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமா இருக்கு, நான் இறந்துவிட்டால் என்.சி.சி. யூனிபாமை எனக்கு போடுங்க, எனது அக்கவுண்டில் ரூ.6 ஆயிரம் இருக்கு அதில் வாட்ச் வாங்கிக்கங்க, அப்பா, அம்மாவ எதிர்த்து பேசக்கூடாது. இந்த கடிதத்தை படித்துவிட்டு கிழித்து போட்டுவிடுங்க.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கல்லூரி மாணவி தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News