உள்ளூர் செய்திகள்
கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
கடலூரில் நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து காணப்பட்டன.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினம் தோறும் நாளுக்கு நாள் வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வந்தனர்.
மேலும் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயிலால் அனைவரும் அவதி அடைந்து வந்தனர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்பவர்கள் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் சாலை ஓரத்தில் உள்ள குளிர்பான கடைகள், இளநீர், பழச்சாறு கடைகள், கரும்பு சாறு, தர்பூசணி உள்ளிட்ட பொருட்கள் வாங்கி சாப்பிட்டு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு முயற்சி மேற்கொண்டனர்.
மேலும் இரவு நேரத்தில் கடும் புழுக்கம் காரணமாக மக்கள் அவதி அடைந்து வந்ததையும் காணமுடிந்தது. இந்த நிலையில் வங்க கடலில் அசானி புயல் உருவாகியதால் கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கடந்த சில நாட்களாக பெய்து வந்தது.
மேலும் மழை பெய்து வந்த நிலையில், வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இந்த நிலையில் அசானி புயல் வலுவிழந்து குறைந்த அழுத்த காற்று தாழ்வு மண்டலமாக மாறி கரைய கடந்தது.
நேற்று முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று காலை முதல் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து காணப்பட்டன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகத்தில் துணிகளை கொண்டு மூடியும், நடந்து செல்பவர்கள் குடைபிடித்தபடியும், சாலையோர வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தது காண முடிந்தது. மேலும் இதன் பாதிப்பு அக்னி நட்சத்திரம் முடியும் வரை இருக்குமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இருந்து வருவதையும் காண முடிந்தது.