உள்ளூர் செய்திகள்
மதுரவாயலில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் கைது
மதுரவாயலில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்ற வாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில், தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக மதுரவாயல் போலீசார் கார்த்திகேயன் நகர், சொக்கநாதன் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்த வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டது. அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய உமா என்பவர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த ஒரு பெண் மீட்கப்பட்டு, அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். கைதான உமா கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.