உள்ளூர் செய்திகள்
மகேஸ்வரி- வாசுதேவன்

கணவரை காப்பாற்ற தனி ஆளாக போராடும் மனைவி- அரசிடம் உதவி கேட்கிறார்

Published On 2022-05-14 07:22 GMT   |   Update On 2022-05-14 07:22 GMT
ஜிப்மரில் நடத்தப்பட்ட சோதனையில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதமாக மருத்துவமனையிலேயே மகேஸ்வரி தங்கியுள்ளார்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி.

இவரது கணவர் வாசுதேவன். ஸ்பதியான இவருக்கு கடந்த ஜூன் மாதம் திடீரென கைகால் இழுத்தது. இதனையடுத்து கணவருக்கு வந்த நோயை சரிபடுத்த மகேஸ்வரி பல டாக்டரிடம் அழைத்து சென்றும் பயனில்லை.

வாசுதேவனால் மீண்டும் எழுந்து நடமாடவில்லை. இதனால் மகேஸ்வரி ஜிப்மர் மருத்துவமனையில் கணவர் வாசுதேவனை சேர்த்தார். கடந்த 7 மாதங்களாக ஐ.சி.யூ. பிரிவில் வாசுதேவன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆரம்பத்தில் மருத்துவமனைக்கு வந்து சென்ற உறவினர்கள் நாட்கள், மாதங்களாக வருகை குறைந்தது. அதன் பிறகு அவ்வப்போது வந்து சென்ற உறவினர்கள் 6 மாதங்களை கடந்த நிலையில் வருகையை முற்றிலுமாக நிறுத்தி விட்டனர்.

இதனிடையே, ஜிப்மரில் நடத்தப்பட்ட சோதனையில் வாசுதேவனுக்கு "தசை அழற்சி நோய்" என தெரிய வந்துள்ளது. தன்னுடைய 2 குழந்தைகளை விட்டுவிட்டு கணவருக்காக 7 மாதமாக மருத்துவமனையிலேயே மகேஸ்வரி தங்கியுள்ளார்.

குழந்தைகளை உறவினர்கள் சிலர் கவனித்து வந்தனர். நாட்கள் செல்ல செல்ல குழந்தைகளை கவனிக்கவும் ஆளில்லை. சமீப காலமாக மகேஸ்லரி தங்கியுள்ள தெருவாசிகள் குழந்தைகளுக்கு சாப்பாடு அளித்து வருகின்றனர்.

தமிழக அரசு தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என மகேஸ்வரி கோரிக்கை வைத்துள்ளார். அவர் கூறியதாவது:-

என்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவிட்டு விட்டேன். குழந்தைகள் கல்வி செலவிற்கும், உணவுக்கும் கூட தற்போது பணம் இல்லை. ஜிப்மரில் கணவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்தாலும் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மேல் சிகிச்சைக்கு உதவிட வேண்டும். எனது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். டாக்டர்களும் உறவினர்களும் போதிய அளவில் உதவிகளை செய்தும் பயனில்லை.

பெரிய பணக்காரர்களுக்கு வரவேண்டிய நோய் எனது கணவருக்கு வந்துள்ளது. கணவரை காப்பாற்ற அனைத்து நகை மற்றும் பணத்தை செலவிட்டும் அவர் உடல்நலம் பெறவில்லை. இதற்கு மேல் சமாளிக்க முடியாமல் தனியாளாக போராடுகிறேன்.

இவ்வாறு மகேஸ்வரி கூறினார்.
Tags:    

Similar News