உள்ளூர் செய்திகள்
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- தி.மு.க. வலியுறுத்தல்
ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தினவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுவை சுகாதாரத்துறையில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது ஒப்பந்த செவிலியராக சுமார் 240 பேர் பணிக்கு எடுக்கப்பட்டனர்.
கிராமப்புற செவிலியர்களான ஏ.என்.எம்.களும் எடுக்கப்பட்டனர். இவர்கள் தான் கொரோனா காலத்தில் மிக அதிகம் உழைத்தனர். இவர்களது ஒப்பந்த காலம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. அதனையடுத்து அவர்களது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் உள்ளது.
இதனால் அவர்கள் தற்போது வேலையின்றி நடுத்தெருவில் நிற்கின்றனர். எனவே கொரோனா ஆபத்து காலத்தில் மக்களுக்கும், அரசுக்கும் உதவிய ஒப்பந்த செவிலியர்கள், ஏ.என்.எம்.களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். அல்லது சுகாதாரத்துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களில் அவர்களை பணி நிரந்தரம் செய்து செவிலியர் தினத்தை கொண்டாட வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.