உள்ளூர் செய்திகள்
ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக் பொருள் விற்பனை: கடைகளில் அதிகாரிகள் சோதனை- ரூ.89 ஆயிரம் அபராதம்
ஆலந்தூர் பகுதியில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆலந்தூர்:
ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து ஆலந்தூர் மண்டல துப்புரவு அலுவலர்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருக்கும் கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2 வாரத்தில் 888 கடைகளில் சோதனை நடத்தி சுமார் 196 கிலோ பிளாஸ்டிக் பைகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த கடை உரிமையாளர்களுக்கு ரூ.89ஆயிரத்து 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.