உள்ளூர் செய்திகள்
கைது

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசி பறிமுதல்- லாரியுடன் டிரைவர் கைது

Published On 2022-05-04 05:40 GMT   |   Update On 2022-05-04 05:42 GMT
களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 8 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களியக்காவிளை:

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் மற்றும் மானிய மண்எண்ணை கடத்துவது தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை களியக்காவிளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிந்தாமணி தலைமையில் போலீசார் களியக்காவிளை அருகே குழித்துறை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமாக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்று விட்டது. தொடர்ந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்று குழித்துறை அருகே திருத்துவபுரம் பகுதியில் லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் டிரைவரை விசாரணை செய்தபோது அவர் பெரும் சிலம்பு வேளிமலை பகுதியை தினேஷ் குமார் (வயது 25) என்று தெரியவந்தது.

மேலும் லாரியை சோதனை செய்து பார்த்த போது சுமார் 8 டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேசன் அரிசியை தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து கடத்தல் வாகனம், அரிசி உணவு தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கபட்டது. அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கிலும் கடத்தல் வாகனத்தை வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News