உள்ளூர் செய்திகள்
கொள்ளை

பண்ருட்டியில் 4 கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2022-04-29 17:50 IST   |   Update On 2022-04-29 17:50:00 IST
பண்ருட்டியில் அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பண்ருட்டி:

பண்ருட்டி கும்பகோணம் சாலையில் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பருப்பு மண்டி நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நள்ளிரவில் செந்தில்குமாரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள் கடையில் இருந்த முந்திரி, பாதாம் உள்ளிட்ட விலை உயர்ந்த பருப்பு வகைகளை திருடினர்.

பின்னர் பக்கத்தில் உள்ள முத்து என்பவரது பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கும் கையில் கிடைத்த பொருட்களை திருடி உள்ளனர். அதற்கு அடுத்ததாக உள்ள துரை என்பவரது பழைய பேப்பர் கடையிலும், மற்றொரு கடையிலும் பூட்டுகளை உடைத்து கைவரிசை காட்டி உள்ளனர்.

அதே சாலையில் உள்ள வேறொரு கடைக்கு லோடு இறக்க வந்த லாரி டிரைவர் அடுத்தடுத்து 4 கடைகள் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவு அந்த பகுதியில் திரிந்த ஒரு நபரின் உருவம் கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் சந்தேகத்துக்கு இடமான ஒருநபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்தடுத்து 4 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News