கோவில்பட்டி அருகே விபத்தில் 2 பேர் பலி
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டங்குளத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மகன் மதிவாணன் (வயது 22). இவரது நண்பர் பாரதிநகரை சேர்ந்த நாகராஜ் (21).
நண்பர்கள் இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் கோவில்பட்டியில் இருந்து கழுகுமலை நோக்கி சென்றுள்ளனர்.
அவர்கள் கழுகுமலை சாலையில் சங்கரலிங்கபுரம் மேம்பாலம் அருகே சென்ற போது அங்கு நடந்து சென்று கொண்டிருந்த குருவிகுளம் கே. புதூரை சேர்ந்த தங்கவேல் (52) என்பவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மதிவாணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தங்கவேல் மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுஇருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகராஜூக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.