உள்ளூர் செய்திகள்
மேல்மலையனூர் அருகே அஞ்சல் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியர்
மேல்மலையனூர் அருகே அஞ்சல் அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் உதவி அஞ்சலக அலுவலராக வேலை பார்த்து வருபவர் மணிகண்டன்(வயது 40). இவரது அலுவலக கணக்குகளை செஞ்சி அஞ்சல் ஆய்வாளர் கமல்ராஜ் ஆய்வு செய்தார்.
அப்போது கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை அஞ்சல் கணக்கில் இருப்பு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 288.50 இருக்க வேண்டும். ஆனால் ரூ.21 ஆயிரத்து 943 மட்டுமே இருந்தது. மீதி ரூ.1 லட்சத்து 97ஆயிரத்து 345.50 மணிகண்டன் கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து கமல்ராஜ் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.