உள்ளூர் செய்திகள்
போராட்டம்

கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் திடீர் மறியல்

Published On 2022-04-25 15:47 IST   |   Update On 2022-04-25 15:47:00 IST
கடலூரில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு முகாம் நடந்தது. இதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள மனு வழங்கி வருகின்றனர்.

இன்று காலை மேல்பட்டாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரதி தலைமையில் 6 திருநங்கைகள் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தனர்‌. பின்னர் திடீரென்று தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நாங்கள் திருநங்கைகளாக இருந்து வருவதால் எங்களது பெற்றோர்கள் அவர்களுடன் இருக்க விடாமல் தள்ளி வைத்துள்ளனர். இதன் காரணமாக நாங்கள் தங்குவதற்கு எந்தவித வசதி இல்லாமல் தவித்து வருகிறோம். மேலும் பலர் தங்களை மரியாதை குறைவாக நடத்தி வருவதால் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், திருநங்கைகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதோடு, பரபரப்பாக காணப்பட்டது.

Similar News