உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே விஷம் குடித்த கணவன்-மனைவி
பண்ருட்டி அருகே குடும்ப தகராறில் கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காடாம் புலியூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 44), இவரது மனைவி அலமேலு. ரவிச்சந்திரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் சரியாக வேலை எதற்கும் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்வார்.
ரவிச்சந்திரனை திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் அலமேலுவால் முடியவில்லை. இதில் மனமுடைந்த அலமேலு விஷம் குடித்துவிட்டு வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளார். போதையில் வீட்டுக்கு வந்த ரவிச்சந்திரன் மனைவி தற்கொலை செய்துகொண்டுவிட்டார் என்று பயந்துவிட்டார். இதையடுத்து அவரும் விஷத்தை குடித்துவிட்டார். 2 பேரும் மயங்கி கிடந்தனர்.
இதனை கண்ட அக்கம்பக்கம் உள்ளவர்கள் இருவரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கணவன்- மனைவி இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.