திட்டக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்களம் புது நத்தம் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (23), மணிகண்டன் (21) ஆகியோருடன் வேலை நிமித்தமாக ஆவினங்குடிக்கு சென்று கொண்டிருந்தார்.
வழியில் எதிர்பாராத விதமாக சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின் பக்கம் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் மணிகண்டன் (32) பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து பலத்த காயமடைந்த 2 பேரும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர்அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.