உள்ளூர் செய்திகள்
கொலை

சென்னை கண்ணகி நகரில் காதல் மனைவியை அடித்து கொன்ற கணவர்

Published On 2022-04-23 13:26 IST   |   Update On 2022-04-23 13:26:00 IST
சென்னை கண்ணகி நகரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் திருமணமாகி ஒரே ஆண்டில் காதல் மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவான்மியூர்:

சென்னை கண்ணகி நகரை சேர்ந்தவர் டெல்லி (வயது23). சென்னை அண்ணாநகர் எல்.ஐ.சி. நகரை சேர்ந்தவர் சரிதா (19). இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர்.

இதையடுத்து திருமணம் செய்துகொள்ள விரும்பினர். ஆனால் இவர்களின் காதலுக்கு 2 பேரின் பெற்றோர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து இருவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர்.

அதன்பிறகு கண்ணகி நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். டெல்லி தினமும் வீட்டில் தூங்கிய பிறகு சரிதா செல்போனில் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் அவரது நடத்தையில் டெல்லி சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அவர் மனைவியை கண்டித்தார். இதனால் அவர்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி இரவு டெல்லி குடிபோதையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 2 மணியளவில் சரிதா போன் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடுக்கிட்டு எழுந்த டெல்லி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் மனைவியை வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சரமாரியாக தாக்கினார். இதில் சரிதா மயங்கி விழுந்தார். டெல்லியும் பின்னர் போதையிலேயே தூங்கிவிட்டார்.

காலையில் டெல்லி கண் விழித்து பார்த்தபோது சரிதா மூச்சுபேச்சு இல்லாமல் கிடந்தார்.

உடனே அவரை டெல்லி ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சரிதா பரிதாபமாக இறந்தார்.

இதுதொடர்பாக கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெல்லியை கைது செய்தனர்.

Similar News