உள்ளூர் செய்திகள்
பிடிபட்ட குரங்குகள்.

மஞ்சூரில் மாணவர்களை அச்சுறுத்திய குரங்குகள் பிடிபட்டது

Published On 2022-04-22 15:25 IST   |   Update On 2022-04-22 15:25:00 IST
பிடிபட்ட குரங்குகள் தொலைதூரமுள்ள முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.
மஞ்சூர்: 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகாமில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. எல்.கே.ஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 

இந்நிலையில் சமீபகாலமாக பள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டுள்ளது.  இந்த குரங்குகள் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை வாரியிரைப்பதும் கையில் கிடைக்கும் தின்பண்டங்களை தூக்கி செல்வதுமாக பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. 

மேலும் இப்பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்குள் புகுந்தும் மாணவர்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வருகிறது. குறிப்பாக மதிய உணவு வேளையில் மாணவர்கள் பள்ளி வரண்டாவில் வரிசையாக அமர்ந்து உணவருந்துவது வழக்கம். 

அப்போது கூட்டமாக வரும் குரங்குகள் மாணவர்களின் கைகளில் உள்ள தட்டுகளை பிடுங்கி உணவுகளை பறித்து செல்கிறது. தடுக்க முயலும் மாணவர்களை மற்றும் ஆசிரியர்களை குரங்குகள் ஆக்ரோஷத்துடன் கடிக்க முயல்கிறது. 

இந்நிலையில் சமீபத்தில் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பெற்றோர்களும் பள்ளியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். 

இதை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து குந்தா ரேஞ்சர் சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் நேற்று முதல் குரங்குகளை பிடிக்கும் பணி தொடங்கியது. 

இதற்காக பள்ளி வளாகத்தில் கூண்டு வைக்கப்பட்டு அதில் பொரி, கடலை போன்ற தின்பண்டங்கள் வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து தின்பண்-டங்களால் கவரப்பட்ட குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கூண்டில் சிக்கியது. 

நேற்று காலை முதல் பிற்பகல் வரை 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிக்கப் பட்டது. தொடர்ந்து பிடிபட்ட குரங்குகள் தொலைதூரமுள்ள முள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று வனத்துறையினர் விடுவித்தனர்.

Similar News