உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் அத்திப்பழ சீசன் தொடங்கியது
கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள அத்திமரங்களிலும் பூக்கள் பூத்து குலுங்குவதுடன், பழங்களும் அதிகளவில் காய்த்து தொங்குகிறது.
அரவேணு:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் அத்தி மரங்கள் உள்ளன. இந்த மரங்கள் அனைத்துமே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் இந்த பகுதிகளில் உள்ள அத்திமரங்களிலும் பூக்கள் பூத்து குலுங்குவதுடன், பழங்களும் அதிகளவில் காய்த்து தொங்குகிறது.
இந்த பழங்கள் அனைத்தும் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களையொட்டிய கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளன. இங்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடனும், ஆசையுடனும் அத்திப்பழங்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
100 கிராம் அத்திப்பழம் 150 ரூபாயுக்கு விற்பனையாகி வருகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளரும். தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும் என்பதால் இந்த பழத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது.