உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆர்த்தி

தனியார் பள்ளிகளில் 2,036 இடங்களுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் அறிவிப்பு

Published On 2022-04-19 12:26 IST   |   Update On 2022-04-19 12:26:00 IST
வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

குழந்தைகளுக்கான இலவச கல்வி மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் பொருட்டு அரசால் ஏற்கனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு 2013-14ம் கல்வியாண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். வருகிற 2022-2023ம் கல்வி ஆண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 147 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் (மெட்ரிகுலேசன், மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி) நுழைவு நிலை (எல்.கே.ஜி.) வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் 2036 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான வசதி ret.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே இதற்கான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் கைபேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தியாக அளிக்கப்படும். சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் வழியே வருகிற 20-ந்தேதி முதல் மே 18ந் தேதிவரை விண்ணப்பிக்கலாம். முதன்மை கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோரது அலுவலகங்களில் எவ்விதக் கட்டணமும் இல்லாமல் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிமாக விண்ணப்பங்கள் பெறப்படின் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள, ஆதரவற்றவர், எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடமிருந்து பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு குலுக்கள் நடத்துதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News