உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்- ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இணையதள வசதி செய்து தர வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
சிதம்பரம்:
தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் மணி சிதம்பரம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்டந்தோறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். கிராமங்களில் உள்ள மதுபானக்கடைகளை மூட வேண்டும். இலவசங்களை தவிர்த்து மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மதுவால் வரும் வருமானத்தை வைத்து மக்களுக்கு இலவச பொருள்களை வழங்கக்கூடாது. மதுவால் வரும் வருமானத்தை வைத்து, தாலிக்கு தங்கம் கொடுக்க வேண்டாம். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டது. யாரும் பயன்பாடு இல்லை. எனவே 5 பவுனுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 5 பவுனுக்கு கடனை தள்ளுபடி செய்து மீதமுள்ள தொகையை வசூலிக்க வேண்டும்.
கூட்டுறவு வங்களில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள், வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கடன் வழங்கப்படுகிறது. அரசின் 90 சதவீத சலுகைகள் வசதி படைத்தவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இணையதள வசதி செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.