உள்ளூர் செய்திகள்
பொறியியல் புல மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

முதல் பட்டதாரி ஊக்கத்தொகை வழங்கக்கோரி அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-11 16:34 IST   |   Update On 2022-04-11 16:34:00 IST
பொறியியல் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை வழங்க கோரியும், கல்விக்கட்டணத்தை குறைக்க கோரியும் வகுப்புகளை புறக்கணித்தனர்.
அண்ணாமலை நகர்:

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படாத முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை வழங்க கோரியும், கல்விக்கட்டணத்தை குறைக்க கோரியும் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் அண்ணாமலை நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.தகவலறிந்த பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் முருகப்பன், பல்கலைக்கழக மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குனர் பேராசிரியர் தெய்வசிகாமணி ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 

அப்போது முதல் பட்டதாரி ஊக்கத்தொகையை கழித்து கல்வி கட்டணத்தை மாணவர்கள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்கள் சுமார் 4 மணி நேர போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Similar News